மலையாளத்தில் மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவின் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தை பனீந்திர குமார் தயாரித்துள்ளார். கிரீஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நாயகி, நீதி பெற சட்ட போராட்டம் நடத்துவதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு கேரளா திருவனந்தபுரம் சென்சார் போர்டு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தனர். படம் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஜூன் 27 அன்று வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்சார் போர்டின் முடிவு காரணமாக இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாது என தெரிவித்திருந்தார். ஆனால் தெளிவான காரணத்தை வெளியிடவில்லை. இதனிடையே ரிலீஸ் தள்ளிப் போவதற்கு காரணம் சென்சார் போர்டின் தலைமையகமான மும்மை அதிகாரிகள் இப்படத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தது தான் என தகவல் வெளியானது.
படத்தை பார்த்த மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள், டைட்டில் ரோலான ஜானகி என்ற பெயர், கடவுள் பெயரான சீதாவின் பெயரோடு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கதாபாத்திரத்திற்கு இந்த பெயர் வைத்திருப்பது மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் எனவும் ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறப்பட்டது. மேலும் ஜானகி பெயருக்கு பதில் வேறு ஒரு பெயரை மாற்ற படக்குழுவிற்கு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை பார்த்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தது. அதன்படி நீதிமன்றம் சார்பாக நீதிபதி நாகரேஷ் படத்தை பார்த்துள்ளர். இதையடுத்து நடந்த விசாரணையில் தயாரிப்பாளர்கள் இரண்டு மாற்றங்களைச் செய்தால் தணிக்கைச் சான்றிதழை வழங்கத் தயாராக இருப்பதாக சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது படத்தின் பெயரை ஜானகி வி vs ஸ்டேட் ஆஃப் கேரளா என மாற்ற வேண்டும் எனவும், ஜானகி என்ற பெயரை இரண்டு காட்சிகளில் மியூட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தில் மாற்றம் செய்ய படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பட வெளியீடு தள்ளிக் கொண்டே போவதால் நிதி இழப்பீடு அதிகம் இருந்து வருவதால் மாற்றங்களுக்கு ஒப்புக்கொண்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட படத்தின் புது பதிவை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுப்பிய மூன்று நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிமன்றம் சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் அடுத்த வாரமான 18ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது