Skip to main content

தந்தையை இழந்த இளம் பாடகி; ஆறுதல் சொல்லித் தேற்றிய இசையமைப்பாளர் தமன்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

super singer 9

 

ஜூனியர் சூப்பர் சிங்கர் 9வது சீசன் நடந்து வரும் நிலையில், அதில் பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. விஜய் டிவியில் பல வருடங்களாக நடந்து வரும் இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் நடந்து வருகிறது.

 

இந்நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் கதையைப் பகிர்ந்து கொண்டபோது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த அவரது தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார். 

 

சூப்பர் சிங்கர் இசைப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும் அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது. இதைத் தொடர்ந்து தொகுப்பாளினி பிரியங்கா,  என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான் தந்தையைப் போல் பார்த்துக் கொண்டார்.  தந்தை நம்மை எப்போதும் நம்மோடு இருந்து ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார். 

 

இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார். ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என்  தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம் “நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம். எதற்கும் கவலைப்படக்கூடாது” என்று ஆறுதல் கூறினார். மேலும் அந்தோணி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலைப் பாடி அனைவரையும் உருக வைத்தார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்