இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிவரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாகத் தடைப்பட்டது. இதனையடுத்து, படக்குழு தமிழகம் திரும்பியது.
தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, முழு பாதுகாப்புடன் மீண்டும் ஹைதராபாத் விரைந்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பானதுமுழுவீச்சில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வந்த சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுஎனஇன்று மதியம் முதலே தகவல் பரவ ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினி ரசிகர்கள், களநிலவரத்தை அறிந்து கொள்ள சமூக வலைதளங்களில் பரபரப்பானார்கள்.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான,சன் பிக்சர்ஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வழக்கமான கரோனா பரிசோதனையின்போது நான்கு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் பிற நபர்களுக்கு எவ்விதத் தொற்றும் இல்லை. பாதுகாப்பு நலன் கருதி 'அண்ணாத்த' படப்பிடிப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.