'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குனரான டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன் உட்பட பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தநிலையில், கரோனா நெருக்கடி காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால், படத்தைத் திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. ஊடரங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், இப்படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட முடிவெடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா. அதனைத் தொடர்ந்து சில முன்னணி ஓ.டி.டி நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே, திரையரங்குகளைத் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியது.
இதனையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான வரும் டிசம்பர் 25-ஆம் தேதி காட்டேரி படத்தைத் திரைக்கு கொண்டு வர, தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இத்தகவலை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.