தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், சிம்பு நடிக்கவுள்ளஅடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளபடம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-ஆவது படம் என்றும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர் நாளை வெளியாகவுள்ளது.
கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வந்தனர். கன்னடத்தில் இயக்கிய இயக்குனர் நார்தனே தமிழிலும் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சிம்பு படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்காததால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது. இதனையடுத்து, இயக்குனர் நார்தன் படத்தில் இருந்து வெளியேறினார். பின்னர், இப்படமானதுவேறு இயக்குனரை வைத்து இயக்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அப்டேட் 'மஃப்டி' தமிழ் ரீமேக் குறித்ததா அல்லது வேறு புதிய படம் குறித்தான அறிவிப்பா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அப்படத்தில் நடித்து வந்த போது நடிகர் சிம்பு அதிக உடல் எடையுடன் கூடிய தோற்றத்தில் காட்சியளித்தார். தற்போது தனது உடல் எடையை அவர் வெகுவாகக் குறைந்துள்ளதால் இக்குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.