Skip to main content

ரஜினிக்கு ஆயுத பூஜை, கமலுக்கு நியூ இயர், அஜித்துக்கு...?  

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்ட, பின்பற்றப்படும் பல சென்டிமெண்டுகள் உண்டு. அதில் ஒன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்த விநாயகர் கோவிலில் பூஜை போட்டால் படம் வெற்றி பெறும் என்பது. முன்பு பல ரஜினி படங்கள் அவ்வாறு தொடங்கப்பட்டன. நாத்திகரான கமலின் படங்களும் கூட தயாரிப்பாளர்களின் சென்டிமெண்டுக்காக அவ்வாறு தொடங்கப்பட்டது உண்டு. இது மிகச் சிறிய விசயம்தான். இது போல பல சென்டிமெண்டுகள் சினிமாவில் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும்.

 

rajinikanth



சென்டிமெண்டுகளைப் போலவே பெருவாரியான ரசிகர்களைக் கவர மாஸ் ஹீரோக்கள் செய்யும் சில வியூகங்கள் உண்டு. அது, அதிக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளை, வணங்கும் கடவுள்களை பாடல்களில் பயன்படுத்துவது. அப்படி செய்வதன் மூலம், அந்தப் பண்டிகை கொண்டாடப்படும்பொழுதெல்லாம் அந்தப் பாடல் பயன்படுத்தப்படும், அந்த நாயகன் நினைவில் இருப்பார் என்பது உண்மை. பலருக்கும் இது வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், இன்றும் புத்தாண்டு வந்தால் ஊரெங்கும், தொலைக்காட்சிகளெல்லாவற்றிலும் ஒலிக்கும் 'சகலகலா வல்லவன்' படத்தின் 'ஹேப்பி நியூ இயர்' பாடல். இந்தப் படத்தை உருவாகும்பொழுது இந்தப் பாடலுக்கு இத்தனை நீண்ட வெற்றி இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. வெளிவந்து முப்பத்தி ஐந்து ஆன்டுகளைக் கடந்தும் இந்தப் பாடல் இன்றும் புத்தாண்டுகளை கொண்டாட்டமாக்குகிறது. அதற்குப் பிறகு பல புத்தாண்டுப் பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப் பாடலை மிஞ்ச முடியவில்லை.

 

kamalhassan



கமலுக்கு நியூ இயர் என்றால் ரஜினிக்கு ஆயுத பூஜை. 'பாட்ஷா' படத்தில் ஆட்டோக்கார மாணிக்கமாக ரஜினி நடித்தது, இந்தத் தலைமுறை ஆட்டோ ஓட்டுனர்களையும் கூட தங்களை மாணிக்கமாக எண்ணி ஸ்டைலாக செயல்பட வைக்கிறது. அந்தப் படத்தின் 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஆயுத பூஜை நாளன்று பாடப்படும் கொண்டாட்டப் பாடலாய் வரும். இன்றும் ஆயுத பூஜை அன்று 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஒலிக்காத ஸ்டான்ட் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். அதன் பிறகு விஜய் உள்பட சில நடிகர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாக நடித்திருந்தாலும் ரஜினி பதித்த அந்தத் தடம்தான் அழுத்தமாக இருக்கிறது.

 

vedhalam ajith



தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இன்னொரு பண்டிகை விநாயகர் சதுர்த்தி. ஊரெங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகருக்கு பல்வேறு உணவுப்பண்டங்களைப் படைத்து பல நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைக்கும் தமிழ் சினிமாவில் பாடல்கள் உண்டு. அதற்கு முன்பே பண்டிகை இருந்தாலும் 80களின் பின்பாதியில்தான் தெருக்களில் சிலை வைத்து விமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வழக்கம் தமிழகமெங்கும் பரவியது. 1993இல் வெளிவந்த 'உடன்பிறப்பு' படத்தில் உள்ள 'ஏ சாமி வருது' பாடல் விநாயகர் சதுர்த்தி பாடலாக தமிழகமெங்கும் ஒலித்தது. பிறகு அஜித் நடித்த 'வான்மதி' படத்தில் இடம்பெற்ற 'பிள்ளையார்பட்டி ஹீரோ' பாடல் அந்த பிளே லிஸ்ட்டில் சேர்ந்தது. அஜித்திற்கும் விநாயகருக்குமான பந்தம் 'அமர்க்களம்' படத்தின் 'மஹாகணபதி' பாடல், 'வேதாளம்' படத்தின் 'வீர விநாயகா' பாடல் என தொடர்கிறது. விநாயகருக்கான பக்தி பாடல்களே பல இருந்தாலும் சினிமா பாடல்களை பயன்படுத்தி கொண்டாடுவதில் இளைஞர்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. அந்த வகையில் தங்கள் ஃபேவரிட் பாடல்கள் இருந்தால் இன்னும் அதிகக் கொண்டாட்டம்தான். விஜய் நடித்த 'வில்லு' படத்திலும் விநாயகர் சதுர்த்தி பாடல் உண்டென்றாலும் அது வேறு விதமாக இருந்தது.

தீபாவளிக்கு விஜய் நடித்த சிவகாசியின் 'தீபாவளி தீபாவளி' பாடலும் அஜித் நடித்த 'அட்டகாசம்' படத்தின் 'தீபாவளி தல தீபாவளி' பாடலும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்படி பண்டிகைக் கொண்டாட்டங்களில் சினிமா பாடல்களின் இடம் முக்கியமாக இருக்கிறது. இன்று விநாயகர் சதுர்த்தி, தெருவெங்கும் 'வீர விநாயக வெற்றி விநாயக...' ஒலிக்கிறது.                            

 

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.