Sri Ganesh

Advertisment

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசுகையில், “படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தத்திற்கு நன்றி. 8 தோட்டாக்கள் படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே இந்தப் படம் பற்றி அதர்வாவுடன் பேசினேன். அன்றிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக ரொம்பவும் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தின் பாதி கதை சொன்னதுமே அவருக்கு பிடித்துவிட்டது. என்னை எழுந்து கட்டிப்பிடித்து நீங்க வேலையை ஆரம்பீங்க என்றார். செகண்ட் ஆஃப் கதை சொல்றேன் என்று சொன்னபோது வேண்டாம் உங்கள் மீது நம்பிக்கை இருக்கு என்றார். ஒருநாள் அவரிடம் செகண்ட் ஆஃப் கதை சொன்னபோது, இது இப்படி இருக்கலாமா என்று ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி கதையைத் திருத்தி எழுத எனக்கு பெரிய உதவியாக இருந்தது. இன்றைக்கு வரைக்கும் படத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படம் வெளியானதும் நடித்த அனைவருமே அந்தக் கதாபாத்திரம் மூலம் அறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படத்தின் உதவி இயக்குநர்கள் கடைசிவரை என்னுடன் இருந்தார்கள். இடையில் படம் நின்றபோது நம்மால் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து, வேறு எதாவது பட வாய்ப்பு கிடைத்தால் போய் வேலை பாருங்கள் என்றேன். என்னுடைய உதவி இயக்குநர் குரு ஸ்விகி ஓட்டிக்கொண்டிருப்பதை ஒருநாள் பார்த்தேன். என்னடா என்று கேட்டபோது உங்க படம் ஆரம்பிக்கும்போது சொல்லுங்கள், நான் வந்து சேர்ந்துக்குறேன்னு சொன்னான்.

Advertisment

ஆழமான கதையம்சம் கொண்ட ஆக்‌ஷன் படமாக குருதி ஆட்டம் இருக்கும். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக குருதி ஆட்டம் இருக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

தன்னுடைய உதவி இயக்குநர் குரு ஸ்விக்கு ஓட்டிக்கொண்டிருந்தார் என்று கூறும்போது ஸ்ரீ கணேஷ் மேடையில் கண்கலங்கினார்.