Skip to main content

எஸ்.ஆர். பிரபாகரனின் அடுத்த படம்!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020
sr prabhakaran

 

 

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதனை தொடர்ந்து  ‘இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயராக உள்ளது. 

 

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த பிரபாகரன். தற்போது அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 

நேற்று இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்துமே ஒரு சேர பார்க்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் உள்ளிட்ட பலர் தான்யா ரவிசந்திரன் உடன் நடித்து வருகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளராக கணேஷ் சந்தானம், கலை இயக்குநராக மைக்கேல் ராஜ், எடிட்டராக டான் பாஸ்கோ ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல் - சிக்கலில் ஞானவேல் ராஜா

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
director sr Prabhakaran shared shocking news about gnanavel raja regards paruthiveeran issue

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதில், “அமீரின் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது எனக் குறிப்பிட்டு சசிகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். பின்பு சமுத்திரகனியும் “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்” எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். 

இதையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக அமீர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் தற்போது உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, ஞானவேல் ராஜாவுக்கு நன்றி என குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , “அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி அண்ணன் அமீரின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை. ஆனால் அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல முன்னால் நிற்கிறது. 

அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட பெரும் படைப்பாளி என்று உலகறிய செய்திருக்கிறது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் இந்த மூன்று படைப்புகளுமே போதும். அண்ணன் அமீரை இன்னொரு பாரதிராஜா-வாக ஏற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து அவருக்கு அதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி. உண்மை என்று ஏதேதோ பேசினீர்களே. இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிக்கட்டா? ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே, அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா?

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஒரே தீர்வு பேட்டியோ மன்னிப்பு கடிதமோ அல்ல, நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு, இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பணத்தை ஏமாற்றினீர்களோ அதன் இன்றைய மதிப்பு என்னவோ அதை அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து இந்த பிரச்சனையை நீங்கள் முடித்து கொள்வதுதான்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

பாலாஜி மோகன், கல்பிகா கணேஷ் வழக்கில் திடீர் திருப்பம்

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

balaji mohan tanya balakrishnan case

 

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன் தனுஷை வைத்து 'மாரி' மற்றும் 'மாரி 2' படத்தை இயக்கி பிரபலமானார். இவர், கடந்த ஆண்டு துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத் தெலுங்கு டிவி நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்தார். மேலும் பட ப்ரோமோஷனில் தன்யா பாலகிருஷ்ணாவை கலந்துகொள்ள விடாமல் பாலாஜி மோகன் கட்டுப்படுத்துகிறார் எனக் குற்றம் சாட்டினார். 

 

இதனைத் தொடர்ந்து பாலாஜி மோகன், தன் மீது நடிகை கல்பிகா கணேஷ் அவதூறு பரப்புவதாகக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கும், 7 ஆம் அறிவு, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திருமணம் நடந்தது. இணையத் தொடர்களில் நடித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் எங்களின் திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த நடிகை கல்பிகா கணேஷுக்கு தடை விதித்து இது தொடர்பாக அவர் பதிலளிக்க வேண்டி உத்தரவிட்டார். இயக்குநர் பாலாஜி மோகன், ஏற்கனவே அருணா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவர் நடிகை தன்யாவை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் உலா வந்த நிலையில் இந்த வழக்கின் மூலம் அந்த தகவல் உறுதியானது.  

 

இதைத் தொடர்ந்து இந்த வழக்கானது நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கல்பிகா தரப்பு வழக்கறிஞர், சமூக வலைத்தளங்களில் இருந்து அவதூறான வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும், வீடியோ மூலம் தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டு தனது முகநூல் பக்கத்தில் புது வீடியோ பதிவிட்டதாகவும் கூறினார். ஆனால், மன்னிப்பு கேட்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கக் கூடாது என்றும், அந்த சமூக வலைத்தள பக்கத்தை கல்பிகா முடக்கக் கூடாது என்றும் பாலாஜி மோகன் தரப்பு வழக்கறிஞர் கோரினார். பின்பு தன் மீது குற்றம் சாடியவர் மன்னிப்பு கோரியதால் தனது மனுவை வாபஸ் பெற்றார் பாலாஜி மோகன். இதைப் பதிவு செய்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.