
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி சேர்க்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு தெரிந்தது. ஆனால், உடல்நலக் குறைவால் எஸ்.பி.பி காலமானார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சீனிவாச ராவ். உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் தீவிர ரசிகர். இந்நிலையில் சீனிவாச ராவ் சர்வதேச நீதிமன்றத்தில் எஸ்.பி.பி மறைவு குறித்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து சீனிவாச ராவ் கூறும்போது, "கடந்த 8 மாதங்களாக கரோனா வைரஸ் தொற்றால் நம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்துவிட்டது. கரோனா வைரஸை உருவாக்கி பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் எனப் பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சீனா இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனும் எண்ணம் சீனாவிற்கு உள்ளது. ஆதலால்தான் கண்ணுக்குப் புலப்படாத வைரஸை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது. இதனால்தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
Follow Us