தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்த் 2023ஆம் ஆண்டு மறைந்த நிலையில் அவரது 73வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாப்படுகிறது. சினிமா மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர், நடிப்பைத் தாண்டி தன்னுடைய பண்பான குணத்தாலும் ஏராளமான நெஞ்சங்களை கவர்ந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் போது, சங்க கடனை அடைத்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் படப்பிடிப்பு தளத்தில் பெரிய நடிகர் முதல் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே விதமான சாப்பாடு வழங்குவதற்கும் இவர் காரணமாக இருந்துள்ளார். இது போன்று பல்வேறு நிகழ்வுகள் விஜயகாந்த் குறித்து இருக்கின்றன.
இந்த நிலையில் அவரது பிறந்தநாளில், அவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “அன்பு நண்பர் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துள்ளார்கள். இதில் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் உட்பட சில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.