மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் குறுகிய காலத்திலேயே இணைந்தவர். 'கர்ணன்' படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்,வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் படக்குழு முடித்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தது.
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி பகிர்ந்து, "இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் ஃபாசில் இவர்களின் தேதி கிடைத்தால் மட்டுமே நடக்கும். இதனை அவர்கள் கருதவேண்டும். நான் செய்த டார்ச்சர் மற்றும் ஒன் மோர்-களுக்கு சாரி மாரி செல்வராஜ் சார். நன்றி மாமன்னன் படக்குழு" என கலகலப்பாக குறிப்பிட்டுள்ளார்.