கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்காரணமாக மார்ச் மாதம் 19 தேதியில் இருந்தே திரைப்பட ஷூட்டிங் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில்தான் இருக்கிறார்கள். பல பிரபலங்கள் மக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சூரி, தனது குழந்தைகளுடன் வீட்டில் செய்யும் சுட்டித்தனமான விஷயங்களை வீடியோவாக எடுத்து தினசரி பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து இயலாதோர்க்கு உதவிகள், காவல்துறையினரிடம் ஆட்டோகிராப், பெப்சி அமைப்பு உதவி எனத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார் சூரி.
தற்போது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்துள்ளார் சூரி. மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டும் விதமாகச் 'சிரிப்போம் சிந்திப்போம்' என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.
தற்போது உள்ள காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், விடாமுயற்சி, தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் எனப் பகிர்ந்து கொண்ட சூரி, மாணவர்களின் குறும்புத்தனமான கேள்விகளுக்கும் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.