இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவரது திடீர் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் சூரி இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு. அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.