soori meets ilaiyaraaja regards viduthalai success

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாக பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூரியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் தங்களது கருத்தை வெளிப்படுத்தி படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

Advertisment

இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது இளையராஜாவை நேரில்சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து "இசையை‌ சந்தித்து நன்றி கூறினேன். ஆசி வாங்கினேன். இறைவனுக்கு நன்றி." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சூரி, இளையராஜா குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், "நான் சினிமாவில் நுழைந்ததில் இருந்து இளையராஜா சாரை பார்த்தது இல்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஸ்க்ரீனில் அல்லது தூரமாகத்தான் பார்த்துள்ளேன். ஆனால் இப்படம் மூலமாகத்தான் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் வரும் காட்டு மல்லி பாடலின் ரெக்கார்டிங் போது அவரை சந்தித்தேன். இப்பாடல் இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவில் சென்டிமெண்டாக ரெகார்ட் செய்யப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் நடந்த இந்த பாடல் பதிவு, இப்படத்தின் முதல் பாடலாக பதிவு செய்தோம். அப்போது நான், வெற்றிமாறன் மற்றும் இளையராஜா மூன்று பேரும் உள்ளே இருந்தோம். விஜய் சேதுபதி வந்து கொண்டிருந்தார்.

இளையராஜா பக்கத்தில் வெற்றிமாறன் உட்கார்ந்திருந்தார். எதிர்புறத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். இளையராஜா அவரது ஹார்மோன் பெட்டியில் ட்யூன் போட கை வைத்து பின்பு என்னை பார்த்தார். பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். எனக்கு பதட்டமாகி விட்டது. 10 நொடிக்கு மேல் பேசாமல் அப்படியே பார்த்ததால், பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். பின்பு அவரிடம் கேட்டபோது, தனது 45 ஆண்டு கால அனுபவத்தில்ஹீரோவை அருகில் வைத்துக் கொண்டு ட்யூன் போடுவது இதுதான் முதல் முறை எனக் கூறினார். அவரது இசையில் நடிப்பது பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவர் நம் வாழ்க்கையில் கலந்துள்ளார். என் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கலந்துள்ளார். நாளைக்கு அவனுடைய பிள்ளை வாழ்க்கையிலும் கலந்து இருப்பார் என்று நினைக்கிறன்" என்றார்.