நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி, விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று மரியாதை செய்துவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாழ்ந்தா இவர மாதிரி வாழ்ந்துட்டு போயிடணும் என்று சொல்வதை பதிவு பண்ணிட்டு சென்றிருக்கிறார். மேடையில், அவர் பேசிய... இருக்கிற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது செஞ்சிட்டு, அவர்கள் வாழ்த்துற அளவிற்கு வாழ்ந்துட்டு போய்டுவோம்... என்பதை போல அப்படியே வாழ்ந்துட்டு போயிருக்கார். ஆரம்ப காலத்தில் கேப்டனும் வேலை செய்தது பெருமையாக இருந்தது. தவசி, பெரியண்ணா போன்ற படங்களில் வேலை செய்திருக்கிறேன். காலம் எல்லாம் மக்கள் மனதில் அவர் வாழ்ந்துட்டே இருப்பார்” என்றார்.