Advertisment

“விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது” - சூரி நெகிழ்ச்சி

soori about kottukkaali

Advertisment

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளைப் பெற்றது. அந்த வகையில் ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று சாதனை படைத்தது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து மதுரைக்கு அருகிலுள்ள ராஜாக்கூர் என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் முளைப்பாரி தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கொட்டுக்காளி படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, சிறப்பு விருந்தினராகப் படக்குழு பங்கேற்றனர்.

இது தொடர்பான வீடியோவை சூரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “பெர்லின் டூ ராஜாக்கூர்... உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை கொண்ட கொட்டுக்காளி-க்கு எங்கள் ராஜாக்கூர் மக்களின் மரியாதை. மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம். எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது. இறைவனுக்கும் ராஜாக்கூர் மக்களுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Kottukkaali P.S. Vinothraj actor sivakarthikeyan actor soori
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe