Advertisment

நா. முத்துக்குமாரை நினைவு கூர்ந்த பாடலாசிரியர் வேல்முருகனின் கவிதை

Advertisment

Songwriter Velmurugan's poem in memory of Na.Muthikumar

தமிழ்த் திரையிசை ரசிகர்கள் மறக்க முடியாத பாடலாசிரியரான மறைந்த நா. முத்துக்குமாரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அவரது உதவியாளராக இருந்து பின்னர் 'நேரம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவரும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநருமான பாடலாசிரியர் வேல்முருகன் அமரர் நா. முத்துக்குமாரை நினைவுகூர்ந்து அஞ்சலி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisment

அண்ணாவின் குரல்

அண்ணாவின் கைப்பேசி எண்ணை

அவர் இறந்து

ஏழு வருடங்கள் கடந்தும்

நினைவில் வைத்திருக்கிறேன்

அண்ணாவின் குரலை

அதன் வழியே

அமெரிக்காவிலிருந்தும்

சிங்கப்பூரிலிருந்தும் கேட்டு

அவ்வப்போது அவர் சொல்லும்

திருத்தங்களைப் பாடல்களில்

பதிவு செய்திருக்கிறேன்

அண்ணாவின் குரல்

என்னை

என் இயல்பை விட்டு இறக்கித்

தூர எறிந்திருக்கிறது

சில நேரங்களில் அன்பைக்கூடக்

கோபமாக நிரப்பியிருக்கிறது

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்

பள்ளிக்கூட மாணவன் போல

கடகடவென்று சொல்லிவிடுவேன்

அண்ணாவின்

கைப்பேசி எண்ணை

எண் தற்காலிகமாக

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற

முகம் தெரியாத பெண்ணின் குரல்

எங்கே கேட்டுவிடுமோ

என்ற ஐயத்திலேயே

அழைக்க எடுத்து அழைக்காமலேயே

விட்டுவிடுகிறேன்

ஊர் உலகமே திரண்டு

வழிகளில் பார்த்தோர் எல்லாம்

அச்சச்சோ என்று கன்னத்தில் போட்டுக் கண்ணீர் சிந்தக்

கவிதைகள் சொன்ன வாயில்

மஞ்சள் கலந்த அரிசியைப் போட்டு

சிதையில் வைத்தோம்

ஏழு வருடத்திற்கு முன்பு

அண்ணாவை எரித்தோம்

அவர் விரும்பியகடற்கரையில்

கரைத்தோம்

ஆனாலும் அவர் குரல் காதில்

கேட்டுக்கொண்டேயிருக்கிறது

அதை எப்படி எரிப்பது

அதை எப்படிக் கரைப்பது.

lyricist velmurugan
இதையும் படியுங்கள்
Subscribe