sonakshi sinha

Advertisment

எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதனிடையே அவரது உடல் மும்பையிலுள்ள வைல் பார்லே என்னும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் பங்குகொண்டனர். ஸ்ரெத்தா கபூர், கிரிதி சனோன், ராஜ்குமார் ராவ், விவேக் ஓபராய், ஏக்தா கபூர், வருண் சர்மா, ரன்வீர் ஷெராய், ரியா சக்கரவர்த்தி போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment

ஒருசிலர் சுசாந்தின் தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல்தான் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கங்கனா ரனாவத் சுசாந்தின் திறமையை பாலிவுட் அங்கீகரிக்கவில்லை என்றே வெளிப்படையாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு விமர்சிப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. அவர் பதிவிடுகையில், “பன்றிகளுடன் சண்டை போடுவதில் என்ன பிரச்சினை என்றால், பன்றிகளுக்கு அது சந்தோஷமாக இருக்கும். ஆனால், நம் மீது அழுக்காகும். நமது துறையின் உறுப்பினர் ஒருவர் காலமாகியிருக்கும்போது சிலர் அவர்கள் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். நீங்கள் உமிழும் எதிர்மறைகருத்தும், வெறுப்பும், நச்சும் இப்போது தேவையில்லாதது. மறைந்தவருக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.