இயக்குநராக அறிமுகமாகியிருந்தாலும் ஒரு கட்டத்தில் நடிகராக பிஸியானார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக வில்லன் வேடங்களில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். பின்பு பல முன்னணி நடிகர்களின் படங்களான கமலின் இந்தியன் 2, விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’, தனுஷின் ‘ராயன்’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ராம் சரணின் ‘கேம் சேஞ்ஜர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, மித்ரன் - கார்த்தி கூட்டணியில் உருவாஉம் சர்தார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிப்பில் பிஸியாக இருந்தாலும் இயக்கம் மீது உள்ள ஆர்வம் அவருக்கு குறையவில்லை. ‘கில்லர்’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக இறங்கி வந்தார். இப்படத்திற்காக ஒரு சொகுசு காரை ஜெர்மனியில் இருந்து இங்கு இறக்குமதி செய்தார். இபப்டத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்து பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தார். பின்பு நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வந்ததால் அதை கொஞ்சம் தள்ளி போட்டதாக தகவல் வெளியானது.
பின்பு கில்லர் படம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நிகழ்வில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, இந்தாண்டு ஜனவரியில் பணிகளை தொடங்கவிருப்பதாகவும் அந்தப் படம் நியூ 2 மாதிரியான ஒரு படமாக இருப்பதாகவும் கேம் சேஞ்ஜர் படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் படத்தின் அறிவிப்பு வருமெனவும் தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது சில மாதங்கள் கழித்து அதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கில்லர் படத்தை கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. இவரோடு இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் என்ற பேனரில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கவும் உள்ளார். இப்படத்தில் அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்த எஸ்.ஜே.சூர்யா இப்படம் தனது கனவு படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.