இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மார்ச் 5-ஆம் தேதி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாகுமென படக்குழு அறிவித்தது. படத்தைத் திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த செல்வராகவன் ரசிகர்கள், இவ்வறிவிப்பைக் கண்டு உற்சாகமடைந்திருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடைகாலத் தடை விதித்தது. கடன் பாக்கி தொடர்பாக ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, திட்டமிட்டபடி மார்ச் 5-ஆம் தேதி படம் வெளியாகுமா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா படத்தின் வெளியீடு குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இடையிலான பிரச்சனை நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீட்டிற்காக பிரார்த்தனை செய்து காத்திருந்த அனைவருக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாகவே ரிலீஸ் ஆகுதுங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாகுமா இல்லையா எனக் குழம்பிப்போயிருந்த ரசிகர்கள், எஸ்.ஜே. சூர்யா ட்வீட் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.