விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மார்க் ஆண்டனி'. வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (15.09.2023) வெளியாகியுள்ளது.
காலை 9 மணிக்கு முதல் காட்சி ஆரம்பித்த நிலையில் ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்தார் எஸ்.ஜே. சூர்யா. அவருடன் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினரும் இருந்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களின் வரவேற்புக்கு தற்போது எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அவர், "உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கொடுத்த அனைவருக்கு நன்றி. இந்த படம் அனைவரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது பெரும் மகிழ்ச்சி" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று இப்படம் குறித்து பகிர்ந்த பதிவையும் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஓ...கடவுளே. எல்லா நல்ல கதையையும் என்கிட்டே அனுப்புறியே. ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதையை கேட்டு வியப்படைந்தேன். என்ன ஒரு கதை... கண்டிப்பாக இது ஒரு மாநாடு-2 என்பேன். அப்படி ஒரு திரைக்கதை" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.