
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'அதிருதா மாமே' வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில், எஸ்.ஜே. சூர்யா பேசியதாவது, "இப்படத்தை மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எனச் சொல்லலாம். இதிலும் டைம் ட்ராவல் இருக்கு. மாநாடு பட சமயத்தில், ஒரே இடத்தில் நானும் விஷாலும் டப்பிங் பணிகளில் ஈடுபட்டோம். நான் மாநாட்டுக்கு பண்ணிக் கொண்டிருந்தேன். அவர் எனிமி படத்துக்கு டப் செய்துகொண்டிருந்தார். அப்போது லன்ச் டைமில் சந்தித்தோம். அப்போது இப்படத்தைப் பற்றிப் பேசினோம். பின்பு கதையைக் கேட்டேன், உடனே இப்படம் நல்ல ரீச் ஆகக்கூடிய படம் என்று தோன்றியது" என்றார்.