Skip to main content

''இவனா ஹீரோ என்று என்னை இளக்காரமாக அந்த நடிகை பார்த்தார்'' - சிவகுமார் ருசிகரம் 

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

முக்தாபிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது.....

sivakumar

 

"1954 ல் அந்தநாள் படம் எடுத்தபோது அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். பிறகு அவர் 1957ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வரும் 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே', பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில் அறிமுகமானார். அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்து பார்த்தவன். அதற்குப் பிறகு 12 வது முடித்து, ஓவியக் கல்லூரி முடித்து சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் பையனா ஹீரோ என்று என்னை இளக்காரமாக அவர் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. 1961ல் முக்தா சொந்தக் கம்பெனி தொடங்கினார். அதில் ஜெமினி கணேசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் முக்தா பிலிம்ஸின் ஆரம்ப காலத்தில் ஆதரவாக இருந்தவர் என்பதை மறக்க முடியாது. 
ஏ.ஜி.எஸ் ஆபீஸில் வேலை பார்த்து வந்த கே.பாலச்சந்தர் லாஸ் ஆப் பேயில் சம்பளமில்லாமல் நிறைய லீவ் போட்டுவிட்டு சினிமாவில் ஈடுபட்டார். அப்படி வந்த அவர் முக்தா நிறுவனத்துக்காக 'பூஜைக்கு வந்த மலர்'   என்ற படத்தில் வசனம் எழுதினார். சினிமாவை நம்பி வேலையை விடுவதா, சினிமாவை நம்பலாமா என்று குடும்ப நிலைமையை நினைத்து கவலையாக இருந்தார் கே.பி. 

 


முக்தா வீட்டிலிருந்து அவருக்கு மாதம் 500 ரூபாய் வரும். அதனால் வீடு நிம்மதி அடைந்தது. அப்படி கே.பிக்கு தைரியம் கொடுத்தது முக்தா நிறுவனம். அப்படி ஒரு முறை சொன்னால், சொன்னபடி சரியாக நடந்துகொள்பவர்கள்தான் முக்தா நிறுவனத்தினர். 'சூரியகாந்தி' படம் எடுத்தார்கள். கதாநாயகன் முத்துராமன். கதாநாயகி ஜெயலலிதா நடித்திருந்தார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் எப்போதும் சினிமாவை வெறுக்கும், சினிமாவை விமர்சிக்கக் கூடிய பெரியார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அது முக்தாவிற்கு பெரிய பெருமை. இந்த நிறுவனத்தில் சிவாஜி 11 படங்கள் நடித்தார். ரஜினி ஒரு படத்தில் நடித்துள்ளார். கமல் இரண்டு படங்களில் நடித்தார். நான் இரண்டு படங்களில் நடித்தேன். இங்கே நேர்மை நாணயம்  உழைப்பு என்று எழுதப்பட்டு இருந்தது. அதற்கு உண்மையான உதாரணமாக இருந்தவர்தான் முக்தா சீனிவாசன் அவர்கள். சினிமாவில் சொன்ன சொல்லை யாரும் காப்பாற்றுவது இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் சினிமாவில் மூன்று பேர் விதிவிலக்காக உறுதியாக இருந்தார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ், சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் , முக்தா பிலிம்ஸ் நிறுவனம். இந்த மூன்று நிறுவனங்களிலும் சொன்ன சொல்லைக் கடைசி வரை காப்பாற்றினார்கள்.

 

sfasf

 

முக்தா அவர்கள் படத்தில் நான் 'அவன் அவள் அது' படத்தில் நடித்தபோது சம்பளம் பேச முக்தா சீனிவாசனின் சகோதரர்  ராமசாமி வந்தார். உதாரணமாக நான் 25 ஆயிரம் ரூபாய் கேட்டால், அவர் 15 ஆயிரம் என்றார். என் சம்பளத்தை முடிவு செய்வதற்கு நீங்கள் யாரென்று சண்டைபோட்டேன். போய் விட்டார். 15 நாள் கழித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு நாட்கள், ஃபிலிம் ரோல்கள் என்று பட்ஜெட் எல்லாம் சொல்லி  சமாதானப்படுத்தி அவர் கேட்ட தொகைக்கே  நடிக்க வைத்து விட்டார். சிக்கனமாக இருப்பார்கள். ஆனால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள். 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் திட்டங்கள் எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்தி விட்டார். நான் சண்டை போட்டாலும் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார் ராமசாமி. அப்படி ஒரு நிர்வாகி அவர். நான்' ராமன் பரசுராமன் 'படத்தில் நடிக்க சிங்கப்பூர், ஜப்பான் என்று வெளிநாடு போனபோது முக்தா அவர்கள் படத்திற்கு வருவதற்கு ஒருநாள் தாமதமானது. 

 

 

படக்குழு பதற்றமானார்கள். கோபப்பட்டார்கள். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். உடன் நடிக்கும் லட்சுமி, நிழல்கள் ரவி காத்திருக்கவேண்டும். நான் அவர்களைச் சமாதானப்படுத்தி விடுகிறேன் என்றேன். அவர்களைச் சமாதானப்படுத்தி நான் முதல் நாள் படப்பிடிப்பு நடத்தச் சொன்னேன். வெளிநாட்டிலிருந்து வந்த நான் தாமதமாகச் செல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியோடு படப்பிடிப்பிற்குப் போனேன். நான் நுழையும்போதே என் கையில் சொன்னபடி பணத்தை திணித்தார் ராமசாமி. இதுதான் அவர்களின் நாணயம். படப்பிடிப்பிலும் திட்டமிட்டு நடத்துவதால் சிக்கனமாக நடத்துவார்கள். காஷ்மீருக்கு படப்பிடிப்பு என்றால் நாலாவது நாள் குழு சென்றால் ஆறுநாட்கள் முன்பே சமையல் தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அனுப்பி விடுவார்கள். நான் வாஹினி ஸ்டுடியோவில் ஒரு படத்தில் சத்யராஜுடன் சேற்றில் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த நிலையில் என் ஜெர்க்கின் பையில் பணத்தை திணித்துவிட்டு போனார். அவர்தான் ராமசாமி கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம் அது. எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடி வந்துவிடும். அப்படிப்பட்ட வார்த்தை நாணயத்துக்குச் சொந்தக்காரர்கள் தான் அவர்கள். ஒழுக்கத்திற்கு சீனிவாசன் என்றால் நேர்மைக்கு ராமசாமி. இப்படிப்பட்ட மகா மனிதர்கள் சம்பந்தப்பட்ட விழாவில் நானும் கலந்து கொண்டு பேசியதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்த பாட்டுக்கு உதாரணமாக வாழ்பவர்கள் சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும்''-நடிகர் சிவக்குமார் பேச்சு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
"Shakti Masala Shanti and Duraisamy are living examples of this song" - actor Sivakumar speech

ஈரோட்டில் இயங்கி வரும் சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் 24 வது ஐம்பெரும் விழா  ஈரோடு சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது.

திருப்பூர் பாப்பீஸ் குழுமத்தை சேர்ந்த செல்வீஸ்வரிசக்திவேல் குத்துவிளக்கேற்றினார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி. துரைசாமி வரவேற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது, மரங்களின் காவலர் விருது மற்றும் பதக்கம், 2022–23 ம் கல்வி ஆண்டில் முதல், இரண்டாம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி, திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசியதாவது, 'கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன் நாக்கீரன் ஒரு பாடலில் சொல்லி உள்ளார். அளவு கடந்த சொத்து சேர்ந்து விட்டால், அது குடும்பத்திற்கு போக மீதி சமுதாயத்துக்கு பங்கு போட்டுக்கொள், இல்லை என்றால் அந்த சொத்தே உன்னை அழித்து விடும். இந்த பாட்டுக்கு உதாரணமாக சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும் வாழ்ந்து வருகிறார்கள்'' என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருப்பூர் பாப்பீஸ் குழுமங்களின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஆ. சக்திவேல், அரிமா கூட்டு மாவட்ட முன்னாள் தலைவர் முத்துசாமி, திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

விழாவில், 338 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய 748 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளைக்கு ஆம்புலன்ஸ் இமயம் காப்பகம், கொங்குநாடுஅறக்கட்டளை, ஈரோடு மிட்டவுன் சேரிடபுள் மற்றும் சர்வீஸ் டிரஸ்ட், சென்னை கொங்கு அறக்கட்டளை, ரோட்டரி திருப்பூர் பிரைம் டிரஸ்ட் என சமுதாய பணிகளுக்காக ரூ.1 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரத்து 125 ரூபாய் நலத்திட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்திதுரைசாமி, டி.செந்தில்குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.