சிவகார்த்திகேயன் நேற்று(17.02.2024) தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் நடித்து வரும் பராசக்தி, மதராஸி படக்குழுவினர், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கமல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து பதிவுகளைப் பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும். அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும். என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
மதராஸி படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட படகுழுவிற்க்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி. தற்போது படப்பிடிப்பில் உள்ள ‘பராசக்தி’ படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி. எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கமலின் எக்ஸ் பதிவு வாழ்த்திற்கு, “உங்களை சந்தித்த நொடியில் இருந்து இந்த வாழ்த்து வரை அனைத்தும் ஆச்சரியமே, இந்த ஆச்சரியம் நிறைந்த பயணம் உங்களோடு தொடர்வது எனக்கு நீங்கள் தந்த அன்பு பரிசு சார் நன்றிகள் பல” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சீமானின் வாழ்த்து குறிப்பிற்கு, “உங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து எனது படங்களுக்கு நீங்கள் தரும் அன்பிற்கும் நன்றி அண்ணன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.