sivakarthikeyan sudha kongara titled as parasakthi

அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அவரது 25வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தேசிய விருது வென்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரவி மோகனும் இணைந்திருக்க அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே.25’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படம் அவருக்கு நூறாவது படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்காக முதல் பாடலை பாடகி தீ குரலில் முன்னதாகவே பதிவு செய்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு கலைஞர் திரைக்கதை மற்றும் வசனத்தில் சிவாஜி நடித்த பராசக்தி படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு முன்பு தகவல் வெளியானது போல பராசக்தி என்றே வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில் பச்சையப்பன் கல்லூரியில் சிவகார்த்திகேயன் படிப்பது போல் காட்சி வரும் நிலையில் ஒரு அறையில் மாணவர்கள் இதை தொடக்கூடாது என்ற வாசகம் அடங்கிய இடம் காட்டப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் அந்த இடத்தில் இருக்கும் ரெக்கார்டரை இயக்குகிறார். அதில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல் ஒலிக்கிறது.

Advertisment

அதே சமயம் அதர்வா கல்லூரியில் இருந்து ஸ்ரீலீலாவோடு தப்பித்து காரில் செல்கிறார். இதனிடையே ரவி மோகன் சிவகார்த்திகேயனின் உருவப் படத்தை சுட்டு பயிற்சி மேற்கொள்கிறார். இறுதியில் மாணவர்களை போராட்டத்துக்கு ஒன்றிணைக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் முன்பு, ‘சேனை ஒன்றே தேவை. பெருஞ் சேனை ஒன்று தேவை’ என ஆக்ரோஷமாக முழக்கமிடுகிறார். இந்த டைட்டில் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து எடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் உலாவந்துக்கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.