


வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே ஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில், எஸ்.எம்.எஸ் பட புகழ் ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது. அப்போது படத்தை பற்றி கே.ஈ.ஞானவேல்ராஜா பேசுகையில்..."ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன். மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.