தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜியாவில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை எழுதி, பாடவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் ஒரு பாடலை எழுதவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவருக்குமே நெருக்கமானவர் என்பதால் இத்தகவல் உண்மையாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இணைந்து ‘பீஸ்ட்’ படத்தில் பங்களிக்க இருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.