Skip to main content

‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

vb

 

நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் அட்லியிடம் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனைப் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா கூறும்போது...

 

hfxhfs

 

"தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ‘டாக்டர்’ & ‘அயலான்’ 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தைப் பெற்ற படங்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அப்படங்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை அழைத்து வரும். ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த உயரத்திற்கு உயர்த்திற்கொள்ள, உழைக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு அபாரமானது.  

 

‘டான்’ எங்கள் இருவருக்கும் மிக முக்கியமானதொரு படமாக இருக்கும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் கதையைக் கூறியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கதையில் பல காட்சிகளில் நகைச்சுவை மிளிர்ந்ததை உணர்ந்தேன். இப்படத்தில் ரசிகர்கள் 100 சதவீதம் உற்சாகமான காமெடி கலாட்டாவான அனுபவத்தைப் பெற்று மகிழ்வார்கள் என்பது உறுதி. அனிருத் அவர்களின் இசை படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பலம். சிவகார்த்திகேயனுடனான அவரது கூட்டணி, இதுவரை பிரமாண்ட வெற்றியினை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு அற்புதமான ஆல்பத்தை கேட்க ஆவலாக உள்ளேன்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காற்று அசைவதால் நமது கொடி பறக்காது” - நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயேன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
sivakarthikeyan about Major Mukund Varadarajan on his 10th passed away anniversary

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நாளில் இன்று காலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜன், நினைவு பலகைக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரை நினைவுகூறும் விதமாக அவர் வாழ்க்கை கதை அடங்கிய சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்காது, அதைக் காத்து வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் மரியாதை செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.