மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 75 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் முதல் முறையாக சிவகார்த்திகேயனோடு இணைந்து பணியாற்ற இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 21வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தற்போது மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் கதையில் இந்த படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட போரில் கலந்து கொண்டார். இந்த போரில், எதிரிநாட்டு தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் மூன்று தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டு அந்த சண்டையின் போது வீர மரணமும் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்று கதையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறாராம்.