சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாவீரன் பட இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் எனத் தெரிவித்துள்ளார். ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவரிடம் நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு இரண்டாம் பாகம் என்றாலே பயம் தான். முதல் பாகத்தின் வெற்றியைக் கெடுக்காமல் நல்ல கதையாக இருக்க வேண்டும். ஆனால் மாவீரன் பட இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை. ஏனென்றால் அது ஒரு தனித்துவமான கதை. அதனால் அதை ட்ரை பண்ணிப் பார்க்கலாம்” என்றார்.
மாவீரன் படம் 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. மடோன் அஷ்வின் இயக்கிய இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத் சங்கர் இசையமைத்திருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியது. கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.