Skip to main content

"உங்களுக்குத் தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால்.." - சிவகார்த்திகேயன் 

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

feqtweqgewgew

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

 

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தடுப்பூசி குறித்து ஆடியோ மூலம் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில்... "என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருடன் தனித்தனியாகப் பேச முடியவில்லை. அதனாலேயே இந்த ஆடியோ பதிவு. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து ஏதேனும் அவசரமான விஷயத்துக்காக மட்டுமே நீங்கள் வெளியே போக வேண்டும் என்பது என் வேண்டுகோள். எப்போதும் முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். இரட்டை முகக்கவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள். நிறையப் பேர் முகக்கவசத்தைச் சரியாக அணிந்து கரோனாவிலிருந்து தப்பித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்குத் தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்துப் போட்டுக்கொள்ளுங்கள். நான் போட்டுக்கொண்டேன்.

 

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை ரொம்பவே கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்குத் திரும்பிவிடுங்கள். ரொம்ப பத்திரமாக இருந்துவிட்டோம் என்றால் இந்தக் கரோனா அலை சீக்கிரமாக முடிந்துவிடும். அனைவரும் அவர்களுடைய வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடலாம். அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் முக்கியமாக உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நிறையக் கேள்விப்படுகிறோம். கரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும். படம் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நானும் பத்திரமாக இருக்கிறேன். வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறோம். உங்களுடைய அன்பு, ஆதரவு அனைத்தையும் சமூக வலைதளம் மற்றும் இதர வழிகளிலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். லவ் யூ ஆல். பத்திரமாக இருங்கள்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்