Skip to main content

கையில்லாமல் சாதித்த மாணவனின் கல்விக்கு உதவும் சிவகார்த்திகேயன்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

sivakarthikeyan congratulated Krishnagiri 10th student

 

தமிழ்நாடு முழுவதும் நேற்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இரு கைகளும் இல்லாத மாணவர் ஒருவர் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்தது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா தனது நான்கு வயதில் வீட்டில் விளையாடிய போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையைக் கண்டு கீர்த்தி வர்மாவின் தந்தை வீட்டில் இருந்து சென்று விட, ஆதரவற்ற நிலையில் கஸ்தூரி தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கூலி வேலை பார்த்து கஸ்தூரி மகனை படிக்க வைத்து வருகிறார். 

 

தொடர் தடைகளால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் வேப்பனப்பள்ளி அருகே நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கீர்த்தி வர்மா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.     இந்த நிலையில், நேற்று வெளிவந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கீர்த்தி வர்மா 500க்கு 437 மதிப்பெண்கள் எடுத்து அவர் படித்த பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரு கைகளை இழந்தும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்து காட்டிய மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கீர்த்தி வர்மாவுக்கு தொலைபேசியில் அழைத்து "சூப்பர்...கலக்கிட்டீங்க..." எனச் சொல்லி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரது மேற்படிப்பிற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார். அந்த மாணவன் தனக்கு மருத்துவராக வேண்டுமென்று ஆசை என சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியல்” - சிவகார்த்திகேயன் பகிர்வு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
sivakarthikeyan Kurangu Pedal trailer released

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘கொண்டாட்டம்’ பாடலின் வீடியோ வெளியானது. 

sivakarthikeyan Kurangu Pedal trailer released

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையில் வீட்டோடு இருக்க வேண்டும் எனப் பள்ளி சிறுவர்களிடம் சொல்ல, அச்சிறுவர்கள் தொடர்ந்து பகல் முழுக்க விளையாடி வருகின்றனர். அப்போது சிலம்பம், கோலி, நீச்சல் என விளையாடி வரும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி விளையாடுகிறார்கள். ஆனால் முதன்மை கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், சைக்கிள் ஓட்டத்தெரியாமல் இருப்பதால், எப்படியாவது சைக்கிள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறான். அதற்காக முயற்சியும் எடுக்கிறான். இறுதியில் அவன் சைக்கிள் கற்றுக்கொண்டானா இல்லையா என்பதை காமெடி, எமோஷன் கலந்து சொல்லியிருப்பது போல் இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த ட்ரலைரை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “கோடை விடுமுறையினை குதூகலமாய் கொண்டாடிய கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியலாய் இதோ இந்தக் குரங்கு பெடல் ட்ரைலர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள பிரபலம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
biju menon to join sivakarthikeyan ar murugadoss movie

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

biju menon to join sivakarthikeyan ar murugadoss movie

இப்படத்தில் மோகன் லால் மற்றும் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வல் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மலையாள நடிகர் பிஜூ மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியகியுள்ளது. பிஜூ மேனன், தமிழில் மஜா, தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010ஆம் ஆண்டு கிஷோர் நடிப்பில் வெளியான போர்க்களம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்படம் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.