Skip to main content

சிவகார்த்திகேயன் vs சிவகார்த்திகேயன் ஃப்ரெண்ட் - இன்று நடக்கும் போட்டி! 

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ராஜேஷ் இயக்கியுள்ள 'மிஸ்டர் லோக்கல்' படம் இன்று (17 மே 2019) வெளியாகிறது. நயன்தாரா, யோகி பாபு, சதீஸ், ரோபோ சங்கர் என புகழ் பெற்ற நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ராஜேஷ், 'சிவா மனசுல சக்தி', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என காமெடி படங்களுக்குப் பெயர் பெற்றவர். சில தோல்விகளுக்குப் பிறகு அவர் இயக்கும் பெரிய படமாக இது கருதப்படுகிறது. இந்தப் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இயக்குனர், பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் நடித்துள்ள 'நட்புனா என்னானு தெரியுமா' படமும் வெளியாகிறது.

 

sivakarthikeyan arunraja kamaraj



அருண் ராஜா காமராஜ், 'நெருப்புடா', 'வர்லாம் வர்லாம் வா' உட்பட பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் ஆவார். இவர் இயக்கிய 'கனா' திரைப்படம் சென்ற ஆண்டின் இறுதியில் வெளிவந்து பாராட்டுகளையும் நல்ல வெற்றியையும் பெற்றது. 'கனா' திரைப்படத்தை தனது நண்பருக்காக சிவகார்த்திகேயன் தயாரித்து அந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் திருச்சியில் கல்லூரி காலத்திலேயே நெருங்கிய நண்பர்கள். சென்னை வந்து 'கலக்கப் போவது யாரு' போன்ற நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக வாய்ப்புத் தேடி, பணியாற்றியுள்ளனர். இன்று இவர்கள் இருவருமே திரைத்துறையில் ஒரு நல்ல நிலையில் இருப்பது மகிழ்வுக்குரியது.

 

natpuna ennanu theiryuma



அருண் ராஜா காமராஜ், பாடலாசிரியர், இயக்குனர் என்பதைத் தாண்டி காமெடிப் பாத்திரங்களில் நடித்தும் உள்ளார். 'ராஜா ராணி', 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. இவர் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில் கவின், ராஜு ஆகியோருடன் இணைந்து மூன்று நண்பர்களில் ஒருவராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் காமெடியில் கலக்கும் படமாக இருக்கிறது என்று சிறப்புக் காட்சியை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயன், அருண் ராஜா என நண்பர்கள் இருவரின் படங்களும்  ஒரே நாளில் வெளியாகிறது.

 

                          

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.