Skip to main content

"என் நடிப்பில் பாதி ரஜினி சாரின் ஃபெர்பாமன்ஸ் தான் இருக்கும்" - சிவகார்த்தியேன்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Sivakarthikeyan about rajini in August 16 1947 Audio Launch

 

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆகஸ்ட் 16 - 1947'. என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ரேவதி ஷர்மா. புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.  

 

அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், "இப்படம் நமது சுதந்திரம் பற்றிய கதை. அது பற்றி சொல்லும் போது தனி மனிதனின் வாழ்க்கையிலே நிறைய வலிகள் வேதனைகள் இருக்கும். அடிமைப்பட்டு கிடந்த ஒரு நாடு பெரிய போராட்டம், நிறைய தியாகம் பண்ணியிருக்கும். இதையெல்லாம் சுவாரசியமாக எடுத்து இயக்குநர் கொடுத்துள்ளார். முதல் படமே இப்படிப்பட்ட கதையை எடுத்துள்ளார் என்று சொன்னால் அவர் வாழ்க்கையில் சவாலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். சவாலை சந்திக்க தயாரானவன் தான் சாதிக்க தகுதியானவன் என்று சொல்லுவாங்க. அந்த வகையில் இயக்குநர் தகுதியானவர் தான். படம் இந்தளவுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் முருகதாஸ் சார். அவருக்கு இயக்குநர் கொடுக்கும் பரிசாக இப்படம் அமையும் என நம்புகிறேன். ஷான் ரோல்டன் இசை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவர் பேசும் போது ஒரு தொனியில் பேசுகிறார். பாடும் போது வேறொரு தொனியில் பாடுகிறார். அது மிகவும் நன்றாக இருக்கு. 

 

நான் திரையில் நடிக்கும் போது பாதி ரஜினி சாரின் சாயல் இருக்கும். அவருடைய ஃபெர்பாமன்ஸ் வந்திரும். நம்முடைய வெற்றி நமது கரியரை வரையறுக்கும். ஆனால் நம்முடைய கேரக்டர் தான் நமது வாழ்க்கையை வரையறுக்கும். அந்த வகையில் கவுதம் கார்த்திக் ரொம்ப ஸ்வீட். கல்யாணம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கும். அதற்கான ஆரம்பம் தான் கவுதம் கார்த்திக்கு இப்படம்." என்றார். மேலும் படக்குழுவினர் அனைவரையும்  வாழ்த்தினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“காற்று அசைவதால் நமது கொடி பறக்காது” - நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயேன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
sivakarthikeyan about Major Mukund Varadarajan on his 10th passed away anniversary

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நாளில் இன்று காலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜன், நினைவு பலகைக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரை நினைவுகூறும் விதமாக அவர் வாழ்க்கை கதை அடங்கிய சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்காது, அதைக் காத்து வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் மரியாதை செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.