siruthai

Advertisment

நடிகர் கார்த்தி நடித்த, 'சிறுத்தை' படம் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அப்படத்தின் வெற்றி காரணமாக, ரசிகர்களால் 'சிறுத்தை சிவா' என அழைக்கப்படுகிறார்.

அதனைத் தொடர்ந்து, 'சிறுத்தை' சிவா அஜித்தை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில், 'விஸ்வாசம்' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினியை வைத்து, 'அண்ணாத்தே' படத்தை இயக்கிவருகிறார். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு, விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தநிலையில், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமானார். வயது சார்ந்த உடல் நலக்குறைவால் மரணமடைந்த அவருக்கு, பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில் இயக்குனர் சிவா தன் தந்தை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறுகையில், “என் தந்தையின் இழப்பை தாங்கிக் கொள்வது கடினமாக உள்ளது. அவரின் இழப்பால் மிகுந்த கவலையில் இருக்கிறேன். அவர் 30 வருடங்களாக தன் துறையில் வெற்றிகரமாக இருந்தார். அவர் பல ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். ஒரு கமர்ஷியல் படமாவது இயக்க வேண்டும் என்பது தான் என் தந்தையின் நீண்ட நாள் ஆசை. ஆனால் நேரம் இல்லாததால் கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவே இல்லை” என்றார்.