
இந்திய சினிமாதுறையில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் சிங்கிதம் சீனிவாச ராவ். திரைதுறையில் இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ளார்.
கமல்ஹாசனுடன் இவர் இணைந்து இயக்கிய படங்களுள் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்கள் தற்போதும் பல இளைஞர்களை கவரும் வண்ணம் உள்ளவை.
உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தலில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில் சிங்கிடம் சீனிவாச ராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “21ஆம் தேதி என் பிறந்தநாள் குறித்து பேச பலர் என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஊடகத்தை சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் லேசான அறிகுறிகள்தான் இருந்தன. சிடி ஸ்கேனிலும் தொற்றின் அளவு மிகக் குறைவாக இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. இப்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன்.
தனி அறையில், எனக்கென தனியாக குளியலறை, கழிவறையோடு இருக்கிறேன். உணவை வெளியே வைத்துவிடுவார்கள். நான் எடுத்துக் கொள்வேன். எனது கல்லூரி விடுதி நாட்கள் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் நலமாகவே இருக்கிறது. 22ஆம் தேதி வரை இந்த வீட்டுத் தனிமை நீடிக்கும். நான் இங்கு தனியே புத்தகங்கள் படித்து, திரைக்கதை வேலைகள் செய்து நேரம் கழிக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் நன்றி. என் பிறந்தநாளுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நன்றி.
கோவிட்-19 என்பது தீவிரமான தொற்று. அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக் கவசம், சமூக விலகலை என எல்லாவற்றையும் பின்பற்ற வேண்டும். நான் எல்லாவற்றையும் பின்பற்றியும் எனக்கு தொற்று வந்திருக்கிறது.
ஆனால் மனித இனம் எப்போதுமே இது போன்ற நோய் தொற்றுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. வரலாற்றில் எப்போதும் அப்படியே நடந்திருக்கிறது. எனவே அனைவரும் நலம் பெறுவோம். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.