ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான ‘காற்றின் மொழி’ படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி...’, ‘பார்ட்டி’ படத்தில் ‘ஜிஎஸ்டி...’,‘ஜடா’ படத்தில் அனிருத்துடன் இணைந்து ‘அப்படிப் பாக்காதடி...’, ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ‘கண்ணனின் லீலை...’ உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன் திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தார். இதையடுத்து அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட ‘அடியாத்தே’ என்ற ஆல்பம் அவருக்குப் புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
ஸ்வாகதா இசையமைத்து, பாடி, நடித்த 'அடியாத்தே' பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குநர் திரு,அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவான 'காயல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவிடைந்துள்ளது. ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்வாகதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட அழுத்தமான படமாக உருவாகி இருக்கிறது 'காயல்'.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. இப்படம் குறித்து பாடகி ஸ்வாகதா பேசியபோது... "நான் நடிகையாக முழுமுதற் காரணம் எனது சகோதரி நடிகை மாயாதான். நடிப்பதற்கு உடலையும் மனதையும் தகுதிபடுத்திக்கொள்ளுமாறு சகோதரி சொன்னதைக் கேட்டு அதற்கானப் பணிகளில் இறங்கினேன். நடிப்பு ரீதியாக என்னை செம்மைப்படுத்திக்கொள்ள ஆதிசக்தி லெபாரட்டரி ஆஃப் தியேட்டரில் என்னை இணைத்துக்கொண்டு அங்கு பயிற்சி பெற்றேன். பின்னர் ஆனந்த் சாமி என்ற தியேட்டர் ஆர்டிஸ்டிடமும் நடிப்பு பழகினேன்.
கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நான் தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருந்தேன். அந்தவேளையில்தான், பிப்ரவரி இறுதியில்தமயந்தியிடமிருந்து அழைப்பு வந்தது. தமயந்தி, என்னிடம் நடிக்க விருப்பம் இருக்கிறதா என கேட்டார். நானும் வாய்ப்பைத் தவறவிடாதபடிக்கு தமயந்தியிடம் கதை கேட்டு நடிக்க ஒப்பந்தம் ஆனேன்" என்றார். ஸ்வாகதா மூன்றாவதாக ஒப்பந்தமான ’காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் கடலோரப் பகுதிகளில் முடிந்துவிட்டது. மற்ற இரண்டு படங்களில் படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.