Skip to main content

"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்! 

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
spb interview

 

 

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு கலங்காதவர்களையும் கலங்க வைத்திருக்கிறது. ஒரு நீண்ட அழகிய கனவு திடீரென முறிந்தது போல திகைத்து நிற்கின்றனர் தமிழ் திரையிசை ரசிகர்கள். இந்த நேரத்தில், எஸ்.பி.பி. பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஹார்லிக்ஸ் டைம்' என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன...

 

"நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நான் ஒரு சாதாரண பாடகன்தான். எனக்குப் பாடுவதில் உள்ள சூட்சமம் தெரியும். அதுதான் வித்தியாசம். நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் பாடுவேன் என்பது தெரியாது. எனக்குப் பிறகு பல பாடகர்கள் வருவார்கள், ஏன் இப்போதே பலர் வந்துவிட்டார்கள். ஆனால், நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன். என்னைப் போல இத்தனை மொழிகளில் வாய்ப்பும் இத்தனை பேரின் அன்பும் அவங்க எல்லோருக்கும் கிடைப்பது கடினம்.

 

வாழ்க்கையை நான் ரொம்ப ரசிச்சு வாழ்றவன். ஒரு மனுசனா எனக்குக் கிடைச்சிருக்க பொறப்பு என்பது பெரிய விஷயம். அதை நான் ரொம்ப கொண்டாடுறேன். ஒன்னு மட்டும் நான் மறக்கவே மாட்டேன், இந்த கோதண்டபாணி என்பவர் இல்லைன்னா இந்த எஸ்.பி.பி. கிடையாது. நான் பல மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட வருஷக்கணக்குல நின்னு பாடிக்காட்டி வாய்ப்பு கேட்டுருக்கேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே தவிர யாரும் வாய்ப்பு தரல. ஆனா, இவரு எங்கயோ நான் பாடுனதை கேட்டுட்டு என்னை தேடி வந்து "நீ சினிமால பாடுறியாயா, நல்லா வருவயா, முப்பது வருஷமாவது பாடுவ"ன்னு சொல்லி கூப்பிட்டார். நான் கூட யாரோ நம்மள காலை வாருறாங்கன்னுதான் நினைச்சேன். ஆனா, அவரு சும்மா வெறும் வார்த்தையாக இல்லாம தீர்க்க தரிசனமாக சொன்னார்.

 

எனக்காக பலர்கிட்ட, 'நல்ல பையன், நல்லா பாடுவான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டார். அதை என்னால மறக்கவே முடியாது. இந்த பிறப்பு என்னோட அப்பா, அம்மா கொடுத்தது. என்னோட அப்பா ஒரு நல்ல இசைக்கலைஞர், நல்ல மனிதர். அவரோட ஜீன்ஸ் எனக்குள்ள இருக்கு. இன்னும் பல நண்பர்கள் எனக்கு உதவுனாங்க. எனக்கு உதவிய முக்கியமானவர்கள் பலர் இப்போ இல்லை என்பதுதான் எனக்கு வருத்தமே. இப்படி, என் மேல் அன்பு கொண்டவர்கள் எல்லோரும் இருக்கணும். எனக்கு வாழ்க்கைன்னா ரொம்ப பிடிக்கும். யாருக்கும் மரணம் வர கூடாது. எப்பவும் எல்லோர் கூடவும் இருக்கணும். ஆனா, அது முடியாத விஷயம். ஏன்னா, இது நம்ம டைரக்டர்கள் எழுதுற திரைக்கதை இல்லை. மேல ஒருத்தன் எழுதுற திரைக்கதை."

 

அந்த நேர்காணல்...

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

பண்ணைபுரம் கொண்டுசெல்லப்படும் பவதாரிணியின் உடல்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Bhavatharini's body being taken to pannaipuram

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது இன்று தேனி எடுத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் நினைவிடத்திற்கு இடையே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பண்ணைபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.