Skip to main content

25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகன்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

cheran

 

சேரன் இயக்கத்தில் வெளியான 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...' என்ற பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கோமகன், கரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். கோமகன் பிறப்பிலேயே பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. தன்னால் இவ்வுலகின் ஒளியைக் காண முடியாவிட்டாலும், தன்னைப் போன்றுள்ள பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த உன்னதமான மனிதர்.

 

நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட கோமகன், இளம் வயதிலேயே பாடும் திறமை மிக்கவராக இருந்தார். சென்னையில் செயல்பட்டுவரும் தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வருகையில், பார்வை குறைபாடு உடையவர்களுக்கு நடைப்பயிற்சி அளிக்கும் அனிதா என்பவருடன் காதல் ஏற்படுகிறது. பல எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு, மோனஸ், மோவின் என இரு மகன்கள் உள்ளனர். தன்னைப்போல பார்வைக் குறைபாடு உள்ளவர்களை ஒருங்கிணைத்து, 'கோமகனின் ராகப்ரியா' என்ற இசைக்குழுவை உருவாக்கிய கோமகன், பல்வேறு கச்சேரிகள் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக அந்தக் குழுவில் இருந்தவர்களுக்கு சிறுபொருளாதார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். விழித்திறன் குறைபாடு கொண்டவர்களின் இசைக்குழு என்ற அனுதாபத்தைத் தாண்டி, உண்மையிலேயே இந்தக்குழுவினர் செய்யும் கச்சேரிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. 

 

அதன் பிறகு, ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க இயக்குநர் சேரன் வாய்ப்பு கொடுத்தார். திரையில் தோன்றியதன் மூலம் இந்தக் குழுவினர் மீது கூடுதல் வெளிச்சம் விழுந்தது. பின், சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அரசு வேலை பார்த்துவந்த கோமகன், வாய்ப்பு அமையும் போதெல்லாம் தன்னுடைய குழுவினரோடு இணைந்து கச்சேரி செய்துவந்தார். இந்த நிலையில், கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இந்த மரணமானது நிகழ்ந்துள்ளது.

 

இது குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "வார்த்தைகள் இல்லை. மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்தச் செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சேரன் குறிப்பிட்டதுபோல 'கோமகனின் ராகப்ரியா' குழுவில் இருந்த அனைவருக்குமே கோமகன் கண்களாகத்தான் திகழ்ந்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.