ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை ரவி மோகன், மறுத்திருந்தார். பின்பு பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் அமைதியாக இருக்க சமீபத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக மீண்டும் விவகாரம் பெரிதானது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியது.
இது தொடர்பாக ஆர்த்தியும் ரவி மோகனும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து தங்கள் தரப்பு நியாயங்களை நீண்ட அறிக்கையாக வெளியிட்டனர். இதையடுத்து இருவரும் அறிக்கை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என ரவி மோகன் தொடர்ந்த விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இதுவரை எந்த அறிக்கையில் வெளியாகாத நிலையில் தற்போது பாடகி கெனிஷா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது வழக்கறிஞர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தனக்கு சமூக ஊடகங்களில் ஆபாசமான மெசேஜ்களும் மிரட்டும் மற்றும் துன்புறுத்தும் மெசேஜ்களும் வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலியல் துன்புறுத்தல்களும் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கும் அவர், அந்த மிரட்டல் மற்றும் மெசேஜ்களும் 48 மணிநேரத்திற்குள் நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். அதோடு தன்னை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு கருத்து வெளியிடக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.