இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று சினிமாவில் பலதுறைகளில் முத்திரை பதித்தவர் நடிகர் சிங்கம் புலி. சரியாக 18 வருடத்துக்கு முன்பே 'தல' அஜித்தை வைத்து ரெட் என்ற அதிரடி படத்தை கொடுத்தவர். பிறகு சில ஆண்டுகள் இடைவெளியில் சூர்யாவை வைத்து மாயாவி என்ற காமெடி படத்தை கொடுத்தார். மேலும் சில படங்களுக்கு வசனமும் எழுதி கொடுத்துள்ளார். அவர் தன்னுடைய திரை அனுபவங்களை காமெடியாக நம்முடன் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " என்னுடைய முதல் படமான ரெட் படம் இயக்கியதை பற்றி பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, இவ்வளவு காமெடியான ஆளாக இருந்துகொண்டு எப்படி அந்த மாதிரியான ஆக்ஷன் படத்தை டைரக்ட் செஞ்சிங்க என்றுதான் கேட்பார்கள். அந்த படம் ஒரு லவ் ஸ்டோரியா செய்யனும் என்று முடிவு செய்தது வேலை பார்க்க ஆரம்பித்து, அப்புறம் முழு நீள ஆக்ஷன் படமா மாறி போச்சி. ஆட்டோவில் ஒரு காட்சி அஜித் சாருக்கும், இளவரசுக்கும் காமடியா ஒரு காட்சி வைத்திருப்பேன். ரெட் படத்தில் ஹூமர் சென்ஸை மிஸ் பண்ணியிருப்பேன். அதுக்கு நான்தான் பொறுப்பு.

அந்த மாதிரி நடக்க கூடாது என்றுதான் அடுத்து நான் சூர்யாவை வைத்து இயக்கிய மாயாவி படத்தில் ஆரம்பத்தில் இருந்து ஹூமர் சென்ஸ் இருக்கின்ற மாதிரி பார்த்துக்கொண்டேன். நான் பழகிய இயக்குநர்கள், நடிகர்களிடம் இருந்து அத்தகைய ஹூமர் சென்ஸ்களை பார்த்து நானும் படத்தில் சேர்த்துக் கொள்வேன். ஒருமுறை கதையாசிரியர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அவருடைய மகனும் எங்களுடன் அமர்ந்து வந்தார். திடீரென அவர், தான் கார் ஒட்டுவதாக கூறினார். பெரியவனானதும் ஓட்டலாம் என்று அவர் கூறினார். அப்பா நீ செத்த பிறகு அந்த கார் எனக்குதானே சொந்தம் என்று அந்த பையன் கேட்டார். நான் ஷாக் ஆகிட்டேன். இந்த காமெடியான விஷயங்களை மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நான் பேசியிருப்பேன். அவ்வளவுதான் காமெடி. ஹீரோ மத்தவன அடிச்சா விரும்புவாங்க, காமெடியன அடுத்தவன் அடிச்சாதான் விரும்புவாங்க" என்றார் சிரிப்புடன்!