90-களில் கோலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கதாநாயகியாக ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் 2005ஆம் ஆண்டிற்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து ’த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் மூலம் கம்பேக் கொடுத்த அவர், தற்போது கதாநாயகியைத் தாண்டி, வில்லி, முக்கிய கதாபாத்திரம், சிறப்புத் தோற்றம் என பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து ஆதி - அறிவழகன் கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ் புரொடைக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிம்ரன், தன்னை பற்றி வதந்தி பரப்புவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற ஆசைப்படவில்லை. என்னுடைய இலக்குகள் வேறு. ஒரு பெண்ணாக, எனது எல்லைகள் எனக்கு தெரியும்.
சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக என்னை வேறு ஒருவருடன் இணைத்துப் பேசுவதைப், பார்த்து அமைதியாக இருந்தேன். ஆனால் சுயமரியாதை முதலில் முக்கியம். ‘STOP’ என்பது பவர்ஃபுல்லான வார்த்தை. அதை இப்போது சொல்வது சரியாக இருக்கும். என்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க யாரும் முன்வரவில்லை. என்னுடைய உணர்வுகளையும் யாரும் மதிப்பதில்லை. இதுபோன்ற வதந்தி பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.