தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி அணியை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாக 'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கினர். இந்நிலையில் இந்தத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு, சிம்பு புதிய படமொன்றில் நடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்துக்கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்குக் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சங்க வளர்ச்சிக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்தப் படத்தை, சங்கத்தின் துணைத் தலைவர் சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், ‘வானம்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற ஞானகிரி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.