நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த அப்டேட் ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், இது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-ஆவது படம் என்றும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் பெயரை பத்து இயக்குனர்கள் நாளை வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அந்தவகையில், வெங்கட்பிரபு, ராஜேஷ், விக்னேஷ் சிவன், ஆனந்த் ஷங்கர், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா,ரஞ்சித், சாம் ஆண்டன், சந்தோஷ் ஜெயகுமார், அஷ்வத் மாரிமுத்து ஆகிய 10 இயக்குனர்கள் இப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ளது.