Skip to main content

அஜித் - விஜய், இதை கைவிட்டு பத்து வருஷத்துக்கு மேலாச்சு... இப்போ சிம்பு தொடங்குறாரா? இது வேண்டாமே சிம்பு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

simbu

 

முழுமூச்சு விடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் சற்று நின்று பெருமூச்சு விட ஏதுவாக பண்டிகைகள் உள்ளன. அந்தப் பண்டிகைகளைக் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுவதில் புதுப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆட்டம், பாட்டம், விசில் சத்தங்களுடன் கூடிய தியேட்டர் கொண்டாட்டம் இல்லாமல் பலருக்கும் பண்டிகைகள் முழுமையடைவதில்லை. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் 10 படங்கள் வரை பண்டிகை நாளில் வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியது உண்டு. சிறிய நடிகர் படம், பெரிய நடிகர் படம், பட்ஜெட் குறைவான படம் என்றெல்லாம் பாரபட்சம் இருந்ததில்லை. தற்போதைய காலகட்டங்களில் பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்திற்கான தளங்கள் விரிவடைந்து வருவதால் தியேட்டர்களில் பண்டிகை நாட்களுக்கான படங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டன. அவ்வப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. முன்னணி நடிகர்கள் தங்களுக்குள் உள்ள தொழில்முறை போட்டியைத் தக்க வைக்கவே பண்டிகை நாட்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. வீரம் - ஜில்லா, வேதாளம் - தூங்காவனம், விஸ்வாசம் - பேட்ட ஆகியவற்றை சமீபத்திய உதாரணமாகக் குறிப்பிடலாம். 

 

கரோனா நெருக்கடிநிலை தளர்வுக்குப் பிறகு, வெறிச்சோடிக் கிடந்த திரையரங்குகள் அனைத்தும் புத்துயிர் பெற, எதிர்வரவிருக்கும் பொங்கல் தினத்தையே வெகுவாக நம்பியுள்ளன. இவ்வருட பொங்கல் தினத்தைக் குறி வைத்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படமும், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் முன்வரிசையில் நிற்கின்றன. இரு படங்களுக்குமான எதிர்பார்ப்புகளும் உச்சத்தில் உள்ளன. இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரைலர் நேற்று (08/01/2021) வெளியானது. அதில் இடம் பெற்றிருந்த 'நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா... நான் காப்பதற்காக வந்த ஈஸ்வரன்டா' என்ற சிம்பு பேசும் வசனம் சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த வசனத்தின் மூலம் சிம்பு, நடிகர் தனுஷை மறைமுகமாக உரசுகிறாரா? இதுபோன்ற மறைமுக உரசல்கள் தமிழ் சினிமாவில் புதியதா? சற்று பின்னோக்கி பார்ப்போம்.

 

இரு போட்டி நடிகர்கள் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பது பாகவதர் - பி.யூ. சின்னப்பா காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. பின்னாட்களில் அது எம்.ஜி.ஆர் - சிவாஜி என்றானது. அந்தக் காலகட்டத்தில் சினிமாவில் அதிகமெடுத்த 'பன்ச்' டயலாக் கலாச்சாரம், இப்போட்டி மனப்பான்மையை ரசிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. மக்களுக்கு தான் சொல்ல வேண்டும் என நினைத்த கருத்துகள் அனைத்தையுமே பன்ச் டயலாக் வழியாகக் கடத்துவது எம்.ஜி.ஆர் வழக்கம். பின்னர் தமிழ் சினிமாவின் முகங்களாக ரஜினி - கமல் மாறினர். அவர்கள் காலகட்டத்தில் இந்த பன்ச் டயலாக் கலாச்சாரம் வேறு வடிவம் கண்டாலும், ஒருவரை ஒருவர் மறைமுகமாக உரசிக்கொள்ளும் நிலைக்குச் செல்லவில்லை. 'எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன், நண்பர்கள் நலம் காண... விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண' என தனது சமகாலத்து தோல்விகளை ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கமல்ஹாசன் வெளிப்படுத்தியிருப்பார். இதுபோன்ற பாணியைக் கமல் அவ்வப்போது கடைப்பிடிப்பது உண்டு. அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது சொந்த வாழ்க்கையில் உள்ள மோதல்களைப் படங்களில் வெளிப்படுத்துவது உண்டு. ‘படையப்பா’ படத்தில் இடம்பெற்றிருந்த 'பொம்பளனா பொறுமை வேணும்...' என ஆரம்பிக்கும் வசனம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிவைத்து எழுதப்பட்டது எனப் பரவலாக பேசப்பட்டது. பின்னாட்களில் தமிழ் சினிமாவை விஜய் - அஜித் கைப்பற்ற, இந்த பன்ச் டயலாக் மோதல் வெளிப்படையாக ஆரம்பித்தது. தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண சினிமா பார்வையாளர்களின் அறிவிற்கே எட்டும்படியாக அத்தகைய வசனங்களை வைத்து விட்டு இது யதார்த்தமாக நடந்தது என இருவரது தரப்பும் மழுப்புவது வழக்கம். 

 

உதாரணமாக 'ரெட்' படத்தில் அஜித் 'அது' எனப் பேசும் பன்ச் வசனத்தை கிண்டல் செய்யும் விதமாக 'யூத்' படத்தில் வில்லனுக்கு எதிராக 'என்னடா அது... எது' என விஜய் கேட்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். 'வாழ்க்கை ஒரு வட்டம்டா' என ‘திருமலை’ படத்தில் விஜய் பேசிய வசனத்திற்கு எதிராக ஜனா படத்தில் 'என் வாழ்க்கை வட்டம் கிடையாது...  தொடங்குன இடத்திலேயே வந்து நிற்க' என அஜித் பேசும் காட்சி இடம்பெற்றது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக 'அட்டகாசம்' படத்தில் ஒரு பாடல் முழுவதும் பன்ச்சாக இடம்பெற்றது. 'இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன...' என்று தொடங்கும் அந்தப் பாடலில் 'ஏற்றிவிடவும் தந்தையில்லை... ஏந்திக்கொள்ள தாய்மடி இல்லை... என்னை நானே சிகரத்தில் வைத்தேன்' என்ற வரிகள் நடிகை விஜய்யை குறிவைத்தே எழுதப்பட்டவை என இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. சில தோல்விகளுக்குப் பிறகு 'திருமலை' படத்தின் மூலம் வெற்றியைப் பெற்ற விஜய், அடுத்து நடித்த 'கில்லி'யில் 'கில்லி ஆடலாம், கபடி ஆடலாம், ஆணவத்துல ஆடக்கூடாது' என்று ஒரு பன்ச் வைத்தார். இந்த வசனங்கள் யதார்த்தமாக வைக்கப்பட்டதாக இயக்குனர்களால் சொல்லப்பட்டாலும் அந்தக் காலகட்டத்தில் நடந்த ரசிகர்கள் போட்டி, மோதலுக்கு எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தன. அரங்குக்குள் கைதட்டலைப் பெற்ற இவ்வசனங்கள், வெளியில் கைகலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. தங்களின் ஆரம்பக் காலகட்ட வளர்ச்சிக்கு  இதை பயன்படுத்திக் கொண்ட இவ்விரு நடிகர்களும், ஒரு கட்டத்தில் இதைக் கைவிட்டனர். அஜித் - விஜய் இருவரும் சந்தித்து பேசிக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் குறிப்பிட்டுப் பேசும்போது அன்புடனும் மரியாதையுடனும் குறிப்பிட்டே வருகின்றனர்.

 

அடுத்த கட்ட நடிகர்களும் சில நேரங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது உண்டு. தமிழ் சினிமாவில் அஜித் - விஜய் என்பதற்கு அடுத்த போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்ட சிம்பு - தனுஷ் இருவரின் ஆரம்ப கட்டப் படங்களிலேயே இவ்வகையான வசனங்கள் வைக்கப்பட்டன. பெரும்பாலும் சிம்புவே இவ்வகை வசனங்களைப் பேசி நடித்துள்ளார். 'மன்மதன்' படத்தில் இடம்பெற்றிருந்த 'வாழ்க்கைல யார் முதல்ல வர்றாங்க என்பது முக்கியம் இல்லை... யார் கடைசியாக ஜெயிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்' என்ற ரீதியிலான வசனம் அந்த நேரத்தில் அறிமுகமானதில் இருந்து மூன்று தொடர் வெற்றிகளைத் தந்த தனுஷை குறிவைத்து எழுதப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. 'நீ பொல்லாதவன்னா, நான் கெட்டவன்', 'லவ் பண்ண பொண்ணு கைவிட்டுட்டான்னு நான் போலீஸ்ல போய் நிக்க மாட்டேன்' என்று தனுஷை சீண்டி பல வசனங்களைப் பேசியுள்ளார் சிம்பு. அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நன்கு அறிமுகமான நண்பர்கள் என்று அவர்களே கூறியுள்ளனர். சந்தானம் படமொன்றின் விழா மேடையில் இருவரும் ஒன்றாகத் தோன்றி மகிழ்ச்சியாக உரையாற்றினர். இனி அதுபோன்ற வசனங்கள் இருக்காது என்று பொதுவான ரசிகர்கள் சிம்பு - தனுஷ் குறித்து எண்ணியிருக்கும்போதுதான் சிம்பு 'ஈஸ்வரன்' பன்ச் பேசியுள்ளார். சமீபத்தில் 'பட்டாசு' படத்தில் 'ச்சில் ப்ரோ' என்ற பாடலில்  இடம்பெற்றிருந்த 'நம்பி வந்தாக்கா கைவிட மாட்டேன்... நன்றி கெட்டாலும் கண்டுக்கமாட்டேன்' என்ற வரிகள் தனுஷுடன் நெருக்கமாக இருந்த இன்னொரு நடிகரைத் தாக்கி எழுதப்பட்டதாக பேசப்பட்டது.

 

ஒருகாலத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே இதனால் ஏற்பட்ட நேரடி மோதல்கள், சமீப காலங்களில் இணையதள மோதல்களாக மாறியுள்ளன. நேரடி மோதல்களால் ஏற்படுகிற ரத்தக் காயங்கள், உயிரிழப்பு இதில் இல்லையென்றாலும் ஒரு தெருவுக்குள் நடந்த மோதல், இன்று உலக சமூகத்தின் முன்னிலையில் இணையத்தில் நடைபெற்று வருகின்றது. வரம்பு மீறிய வசை மற்றும் இழி சொற்கள் துணையோடு நடைபெற்று வரும் இந்த இணைய மோதல் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க எள்ளளவும் துணை புரியப்போவதில்லை. இதைக் கண்டிக்க மற்றும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நடிகர்களுக்கு நிச்சயம் உள்ளது.

 

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம், 10 ஆண்டுகளுக்கும் முன்னர் நடிகர் விஜய் மற்றும் அஜித் கைவிட்ட யுக்தியை நடிகர் சிம்பு மீண்டும் கையில் எடுத்துள்ளாரோ எனத் தோன்றுகிறது. சில தோல்விகள், ‘அஅஅ’, மாநாடு’ பட சர்ச்சைகள் என ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்த சிம்புவுக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ கைகொடுத்தது. அதன் பிறகு வந்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் மீண்டும் பில்ட்-அப்புகள் அதிகம். படம் தோல்வியடைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து செம்ம லுக்கில் வந்திருக்கும் சிம்புவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு நல்ல படம்தான். பல நேரங்களில் சமூக அக்கறையுள்ளவராகப் பேசி வரும் நடிகர் சிம்புவிற்கு நாம் கூறவேண்டியது ஒன்றுதான்... 'இது வேண்டாமே சிம்பு'!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார்.