
தனுஷ், சிம்பு, விக்ரம் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.கே. கிருஷ்ணகாந்த் காலமானார்.
இவர் தனுஷ் நடிப்பில் திருடா திருடி, விக்ரம் நடிப்பில் கிங், சிம்பு நடிப்பில் மன்மதன் உள்ளிட்ட ஹிட் படங்களை தயாரித்தவர். பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸில் மேனேஜராக பணிபுரிந்து பிறகு தயாரிப்பாளராக மாறியவர்.
கிருஷ்ணகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்திற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். "மன்மதன்" படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்கள். "மன்மதன்" படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்க சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க, இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது.
அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.