
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்து வந்தார். கரோனாவால் படத்தின் ஷூட்டிங் முடங்கியிருந்தது. இந்தப் படத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படும் என்பதால், கரோனா அச்சுறுத்தல் முழுவதும் முடிந்தபிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.
'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனிடையே 'மாநாடு' ஷூட்டிங் தொடங்குவதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சிம்பு நடிக்க திட்டமிட்டு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.
இந்தப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது. 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 5-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கில், இயக்குனர் பாரதிராஜா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து வந்த சிம்பு, 8ஆம் தேதி, படக் குழுவுடன் கலந்துகொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பாக சிம்பு, சமூக வலைதளங்களில் இருந்து விலகிய நிலையில், இன்று காலை சமூக வலைதளங்களில் மீண்டும் இணைந்திருக்கிறார். அவர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோக்களை தொகுத்து ஒரு சின்ன பட டீஸர் போல தனது பக்கத்தில் முதல் பதிவாக வெளியிட்டுள்ளார்.

அதில் ‘ஆத்மன்’ என்று பெயரிட்டுள்ளார். அது அடுத்து அவர் நடிக்கும் படத்தின் பெயரா இல்லை வேறு என்ன என்பது தெரியவில்லை. மேலும், 'எப்போது மாணவர்கள் தயாராகிறார்களோ, அப்போது ஆசிரியர் பாடம் எடுக்க வருவார்' என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலையில் தொடங்கப்பட்ட 'சிலம்பரசன் டி.ஆர்' என்னும் அந்த ட்விட்டர் பக்கத்தைச் சில மணிநேரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர ஆரம்பித்துவிட்டனர்.