Skip to main content

விஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட்! ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

கடந்த ஆண்டு... திடீரென ஒரு தெலுங்கு பாடல் தமிழ் இளைஞர்களின் ரிங் டோனாக, காலர் ட்யூனாக, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக, இன்னும் என்ன வடிவிலெல்லாம் கொண்டாடப்பட முடியுமோ அப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது. காதல் மனம் கொண்ட இளைஞர்களை ஆட்கொள்கிறது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் தராத காதல் பாடல்கள் இல்லை. ஆனாலும் நெடுநாள் கழித்து ஒரு தெலுங்குப் பாடல் தமிழ் திரையிசை ரசிகர்கள் மத்தியில் இப்படி வைரல் ஆகக் காரணம், இனிமையான ப்ளெசண்டான மெட்டு, அது விஜய் தேவரகொண்டா என்ற நடிகரின் பாடல் என்ற கவனம்... இந்த இரண்டு காரணங்களைத் தாண்டி அந்தப் பாடலைப் பாடிய மயக்கும் குரல். ஆம், அந்தப் பாடல் கீதா கோவிந்தம் படத்தின் 'இன்கேம் இன்கேம்', குரல் சித் ஸ்ரீராம் உடையது.

 

sid sriram



2012ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் பாடல்கள் வெளியான போது, அந்த ஆல்பத்தில் 'அடியே... என்னை எங்கே நீ' பாடல் வித்தியாசமாக இருந்தது. முதலில் 'என்னடா பாட்டு இது' என்று குழப்பிய இழுவையான மெட்டு, பிசிறடிக்கும் குரல் ஆகியவை மீண்டும் மீண்டும் கேட்கக் கேட்க ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கத்தைப் போலவே உள்ளே இறங்கி கேட்பவரை கிறங்க வைத்தது. இது இசையை நுணுக்கமாக  ரசிப்பவர்களுக்கு மட்டுமே. பொதுவான ரசிகர்களுக்கு அந்தப் பொறுமை இல்லாததாலும், படம் வெளியாகி அடைந்த படுதோல்வியாலும் அந்தப் பாடலும் மெல்ல மறைந்தது. மீண்டும் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'ஐ' படத்தின் 'என்னோடு நீ இருந்தால்' பாடலில் கவனிக்க வைத்தது சித் ஸ்ரீராம் குரல்.


தமிழ் திரைப்பட பாடகர்களில் ஜாம்பவான்களாக விளங்கிய டி.எம்.எஸ்., எஸ்.பி.பி, யேசுதாஸ் போன்றோரின் குரலில் ஒரு ஒழுக்கம் இருக்கும். இசையின், மெட்டின் எல்லைகளுக்குள் படிந்து செல்லும் குரல்கள் அவை. ஆனால், சித் ஸ்ரீராமின் குரல் சற்றே ஒழுக்கமற்று பிசிறடிக்கும் தன்மையுடன் இருந்ததே திரையிசை ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அதற்கு முன்பே 'ராசாத்தி என் உசுரு' பாடிய சாகுல் ஹமீது, 'காதல் பிசாசே' போன்ற பாடல்களைப் பாடிய உதித் நாராயணன் போன்றவர்களின் குரலுக்கும் இந்தத் தன்மை உண்டென்றாலும் அவர்களுக்கு இத்தனை பாட்லகள் பாடும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை இசையுலகம். சித் ஸ்ரீராமின் குரலுக்கு இருக்கும் வசீகரம் இன்னும் அதிகம் என்பதும் உண்மை.

 

 

sid sriram collage



எஸ்.பி.பி, மனோ, அவர்களுக்குப் பிறகு ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா வரைக்கும் மட்டுமே பாடலின் குரலை வைத்து பாடகர்களை கண்டு சொல்வது தமிழ் ரசிகர்களுக்கு எளிதாக இருந்தது. கிருஷ்ணராஜ், மாணிக்கவிநாயகம் போன்றோர் வேறு ரகம். அதன் பிறகு தமிழ் திரைப்பட இசையுலகில் ஒரு புரட்சியைப் போல புதிய பாடகர்கள் கூட்டமாக இடம் பிடித்தனர். அது நல்ல போக்கா இல்லையா என்பது வேறு விவாதம். ஆனால், ரசிகர்கள் மனதில் பதிந்த குரல் என்ற ஒன்று சில காலத்துக்கு இல்லாமல் இருந்தது என்றே சொல்லலாம். பிறகு நடிகர்கள் பாடும் போக்கும் அதிகரித்தது. படங்களில்  பாடல்கள் நிறைய வைப்பது படத்தின் தரத்தைக் குறைக்கும் என்ற எண்ணத்துடன் படமெடுக்கும் இயக்குனர்கள் பெருகினர். கதைக்களங்கள் மாறின. பாடல்களால் பெரும் புகழ், வெற்றி பெற்ற செல்வராகவனே கூட தன் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆல்பத்தில் மூன்றே மூன்று பாடல்களை (தீம் தவிர்த்து) வைத்தார். இப்படி தமிழ் திரைப்படங்களின் பாடல்களின் நிலை மோசமடைந்த பின் ரசிகர்களின் மனதில் தனி அடையாளத்துடன் இடம் பிடித்த முக்கிய குரல் சித் ஸ்ரீராம் குரல் என்றே சொல்லலாம்.


ஆரம்பத்தில் வருடத்திற்கு ஒன்று இரண்டு என்று பாடிய சித், இந்த ஆண்டில் கிட்டத்தட்ட எல்லா முக்கிய படங்களிலும் ஒரு பாடல் பாடியுள்ளார். 'ஏனோ வானிலை மாறுதே', 'மறுவார்த்தை பேசாதே' இரண்டும், வெளியாகி ஆண்டுகளாகியும் இளைஞர்களின் மனதை, மொபைலை, குரலை ஆக்கிரமித்திருக்கும் பாடல்கள். 'கீதா கோவிந்தம்' படத்திற்கு சித் பாடிய 'இன்கேம் இன்கேம்' பாடல் கொடுத்த மைலேஜ் மிகப்பெரியது. தமிழ் திரைப்பட வரலாற்றில் பாடல்களால் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் பல. பழைய மோகன் படங்களிலிருந்து காதலர் தினம், பார்வை ஒன்றே போதுமே, வருஷமெல்லாம் வசந்தம் ஆகியவற்றை உதாரணங்கள் என்று சொல்லலாம். அந்தக் காலகட்டம் தெரியாத 2K  கிட்ஸ்சுக்கு ஒரு பாடல் படத்திற்கு எவ்வளவு பெரிய ஓப்பனிங் தர முடியும் என்று காட்டியது 'இன்கேம் இன்கேம்'. அதற்கடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் படங்களில் பெரும்பாலும் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் இதயமாக இருந்தது 'கண்ணான கண்ணே' பாடல். அதில் தாமரையின் வரிகளும் சித் ஸ்ரீராமின் குரலும் ஆற்றியது மிக முக்கிய பங்கு.

 

 

sid sriram carnatic



இந்த வெற்றிகளுக்குப் பின்பு புதிய, சிறிய படங்களுக்கு பெரிய அறிமுகம் தரும் விஷயமாக சித் ஸ்ரீராமின் குரல் ஆகிவிட்டது. ஒரு காலகட்டத்தில் எல்லா படங்களுக்கும் மணிவண்ணனின் கால்ஷீட் வாங்கிவிடுவார்கள். இன்னொரு காலத்தில் வடிவேல். படம் எப்படியிருந்தாலும் காமெடி கரைசேர்க்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அது பலமுறை நடந்தும் இருக்கிறது. இசைக் கோணத்தில் எடுத்துக்கொண்டால் கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சிறிய படங்களுக்கு கவனம் ஈர்க்க, சிம்புவை வைத்து ஒரு பாடலை பாடச் செய்வார்கள். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் கவனத்தை எளிதாகப் பெற சில விஷயங்கள் செய்யப்பட்டன. இப்பொழுது சித் ஸ்ரீராமின் குரல் அதற்கு உதவுகிறது. ஆனால், அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பாடலும் ஏனோ தானோ அல்ல, சூப்பர் டூப்பராகத்தான் இருக்கிறது. 'கட்டப்பாவக் காணோம்' படம் பலருக்கு மறந்தாலும் அதில் இடம்பெற்ற 'ஹே பெண்ணே' பாடல் மறக்காது. இப்படித்தான் சித் பாடிய ஒவ்வொரு பாடலும்.


சென்னை மைலாப்பூரில் பிறந்த சித் ஸ்ரீராம் ஓரிரு வயதிலேயே அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்க்கோவுக்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நண்பர்களுடன் சேர்ந்து கவர் ஸாங்க்ஸ் உருவாக்கி யூ-ட்யூபில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், ரஹ்மானுக்கு அந்தப் பாடல்களை அனுப்பி வைத்து வாய்ப்பைப் பெற்றவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்கைப்பிலேயே தனது முதல் பாடலைப் பதிவு செய்த இவர் இன்று சென்னைக்கு மீண்டும் குடிவரலாம் என்னும் அளவுக்கு பாடல் வாய்ப்புகள். ஆனால், கவனமாகவே தேர்வு செய்கிறார் சித் ஸ்ரீராம். லேட்டஸ்ட்டாக 'அந்தி மாலை நேரம்... ஆற்றங்கரை ஓரம்...' என்று நம் மனதில் நிலவைக் காய விடுகிறார் சித். அவருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துகள்.             

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரி குளறுபடிகள்; காவல் துணை ஆணையர் மீது நடவடிக்கை

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

AR Rahman Music Concert Action against Deputy Commissioner of Police

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.

 

இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் (10.09.2023) 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட்  நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அதே சமயம் இந்த இசைக் கச்சேரி ஏகப்பட்ட குளறுபடிகளை ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தார்.  அதில் போக்குவரத்துக்கு நெரிசல், அதிக கூட்டத்துக்கான காரணம், வாகனம் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவை குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தி இருந்தார்.

 

AR Rahman Music Concert Action against Deputy Commissioner of Police
தீபா சத்யன்

 

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரியான பள்ளிகரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது மட்டுமின்றி சென்னை பெருநகர கிழக்கு ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திருநெல்வேலி நகர கிழக்கு காவல்துறை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

"பழசெல்லாம் தூக்கி வீச கேட்குதா என் பாச" - ‘மாமன்னன்’ லிரிக் வீடியோ

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Manna Maamanna Lyric video

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியரும், தமிழ் ராப் பாடகருமான தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார். “கேக்குதா என் பாச... எனக்குள்ளே ஒரு ஓச” எனத் தொடங்கும் இப்பாடலை அவரே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி வந்த படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக்கல் வீடியோவுமே வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையிலேயே வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் படம் வெளியான பிறகே தெரிய வரும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.