உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த எலான் மஸ்க், தற்போது அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ட்விட்டரில் ப்ளூ டிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதா மாதம் 8 டாலர்(ரூ.660) கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பயனாளர்களுக்கு எவ்வளவு என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாகப் பல விமர்சனங்களும் புகார்களும் எழுந்து வந்தாலும் மாதம் 8 டாலர் வாங்கவுள்ளதாக மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் கிண்டலாக ரிப்ளை செய்துள்ளார். "உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சிபி சத்யராஜின் இந்த கிண்டல் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.