Skip to main content

யார் அப்படி சொன்னது? - ஷோபனாவுக்காக குரல் கொடுத்த அமிதாப் பச்சன்

Published on 09/06/2025 | Edited on 09/06/2025
shobana about amitabh bachan

தமிழ், மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் பரதநாட்டிய நடனக்கலைஞரான நடிகை ஷோபனா. கடந்த மாதம் பத்ம பூஷன் விருது பெற்றிருந்தார். சமீபகாலமாக குறைவான படங்களிலே நடித்து வந்த அவர், கடைசியாக மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘துடரும்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு முன்பாக தெலுங்கில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் நடித்த ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையில் வந்த ஷோபனா ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் அமிதாப் பச்சனுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு ரசிகர் கேட்க, ஒரு சம்பவத்தை அவர் பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்திருந்ததாவது, “அமிதாப் பச்சன் சார், அப்போதிலிருந்து இப்போது வரை ஒரே மாதிரிதான் இருக்கிறார். நான் நடித்த நடிகர்களிலே மிகவும் தன்னடக்கமான கலைஞர். பொதுவாக மிகச் சிறந்த கலைஞர்கள் சிலர், பணிவுடன் நடந்து கொள்வார்கள். அந்த வகையில் அமிதாப் பச்சன் பணிவைப் பற்றி ஒரு நிகழ்வை நான் சொல்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு அவருடன் ஒரு பாடலுக்காக நடிக்க அஹமதாபாத் சென்றிருந்தேன். அதில் அவருடன் ஒரு சிறிய பகுதிதான் நான் நடித்தேன். ஆனால் எனக்கு அதில் நடிக்க நிறைய அணிகலன்கள் நிறைந்த உடைகள் இருந்தது. 

அமிதாப் பச்சன் சாருக்கு கேரவனில் இருந்தார். எல்லோரும் படப்பிடிப்பை காண வந்திருந்ததால் மொத்த நகரமும் ஸ்தம்பித்தது. அப்போது எனது கேரவன் எங்கே என்று நான் கேட்டேன். அப்போது கூட்டத்தில் இருந்த படக்குழுவினரை சேர்ந்த ஒருவர், அந்த நடிகை மலையாளத் திரைத்துறையைச் சேர்ந்தவர், அவர்கள் அனைவரும் மிகவும் அட்ஜெஸ்ட் செய்து கொள்வார்கள், அதனால் அந்த நடிகை மரத்தில் பின்னால் உடைகள் மாற்றலாம் என கூறினார். இதை கேரவனில் உள்ளே இருந்த அமிதாப் பச்சன், வாக்கி டாக்கியில் கேட்டதும், உடனடியாக வெளியே வந்து கோபமாக யார் அப்படி சொன்னது என கேட்டார். பின்பு அவரது கேரவனை எனக்கு பயன்படுத்த கொடுத்தார். அவ்வளவு பணிவான மனிதர். கல்கி பட படப்பிடிப்பின் போது கூட அவர் அதிக எடையுள்ள அணிகலன்களை அணிந்திருந்தாலும் மிகவும் கருணையுடனும் பண்பாட்டுனும் நடந்து கொண்டார். யாராவது அவரை பார்க்க வந்திருந்தால் அவ்வளவு அணிகலன்களுடனும் எழுந்து நின்று பணிவுடன் வரவேற்றார்” என்றார்.

சார்ந்த செய்திகள்